Monday, May 5, 2008

பிச்சை கேட்டு வீடுதோறும்
கோட்டை யாத்திரை
தேர்தல் .
காரித்துப்புகிறது கடல்
காதலர்களைப் பார்த்து
அலைகளாய்....!

Friday, April 18, 2008

நரபலி சமூகத்தில்
ஒப்பாரிகள்
தேசியகீதம் .....

Saturday, October 13, 2007

எனக்குள்ளும் காதல் உண்டு

இதுவரை
எவனையும்
ஏரெடுத்துப்பாராத
வெகுளித்தனமான அன்பு
வினயமுள்ள தாபம்
என்னைப் பகிர்ந்துகொடுக்காத பாசம்
வெறித்தனமான காதல்...

துன்பத்தில்
பங்குகொள்ளும் பக்குவம்
தலைகோதித் தூங்கவைக்கும் தாய்மை
எனைச் சார்ந்தோரையும் நேசிக்கும் பரிவு
அகங்காரமில்லாத ஊடல்
ஒரு ஆணவ அணைப்பு
நானில்லாமல் அவளின் தவிப்புகளை
அவளுக்குத் தெரியாமல்
நான் மறைந்திருந்து ரசிக்க!

ஒரே படுக்கையில் இருவர் கிடந்தாலும்
காதல் ஓங்க
அவள் உண்ண நான் பசியாற
கள்ளமில்லா வெள்ளைக்காதலியை
ஒரு வெகுளித்தனமான காதலியைக்
கைப்பிடிக்க எனக்கும் ஆசைதான்...

எங்கிருக்கிறாய்?
எப்படியிருக்கிறாய் என்னவளே?
நான் இதுவரை
உன்னைச் சந்தித்துவிட்டேனா? அல்லது
என்னைக் கடந்திருக்கிறாயா?
நீ எங்கிருந்தாலும்…!
உன்னை நான் காதலிக்கிறேன்!

கொஞ்சம் அழகானவன்

நான்
அழகானவன் அல்ல
எனக்கும் தெரியும் - ஆனால்
அன்பானவன்
உனக்குத் தெரியும்!

பார்த்தவுடன் மயக்குகிற
பளபளப்பு இல்லைதான்
பழகினால் விரும்புகிற
அழகு இருக்கிறது

முகம்
அடையாளத்திற்குத்தானே ஒழிய
அழகுக்கா?

ஆனாலும்...
தூரத்தில் கொஞ்சம் அழகானவன்
அருகில் அதிக அன்பானவன்

என்னை நீ
தூரத்தில் பார்
அருகில் வை..

Tuesday, August 21, 2007

என் பேனாவின் பிதற்றல்கள்!

  1. நாமனைவரும் நாட்காட்டிகள், நாள் தோறும் கிழிக்கப்படுகிறோம்
  2. வெற்றி என்பது தோல்விகளின் தொகுப்பு
  3. இறந்தகால அனுபவங்கள் நிகழ்கால சாதனைகள்
  4. அறிதலினால் விளைவது புரிதல், புரிதலினால் விளைவது காதல்
  5. கசப்புகளின்றி சாகசம் இல்லை
  6. நெருப்புக்கு ஓய்வென்பது அணைவதல்ல, எரிப்பது! உனக்கு ஓய்வென்பது உறங்குவதல்ல, உழைப்பது!
  7. கடந்து செல்கிறது நமக்கான வினாடிகள் நீ கழிக்கப்படுவதற்குள் விழித்துக்கொள்
  8. இறந்துபோன ஒன்றுக்கும் உயிரிருக்கிறதென்றால் அது காலத்திற்கு மட்டுமே
  9. பூக்களைக்கொண்டு காலத்தைச் செதுக்குவது காதல்

Saturday, August 18, 2007

எனது பொன்மொழிகள்

  • பாறைகளைச் சந்திக்காவிடில் ஓடைகளுக்குச் சங்கீதம் இல்லை
  • வலைகளின் எண்ணிக்கை அதிகமாவதால் மீன்களின் எண்ணிக்கைக் குறைந்துபோவதில்லை
  • புதைக்கப்படுவதுதான் கல்லறையென்றால் ஒவ்வொரு மனிதனின் இதயமும் கல்லறைதான்
  • தன் மீது விழும் மண்ணைச் சுமையென நினைப்பதில்லை விதை
  • காயங்களுக்கு மருந்து வேண்டாம், கனிவான பார்வை போதும்
  • எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொள், ஏமாற்றத்தால் சோர்வடையமாட்டாய்
  • படைப்பாளனாய் வேண்டாம், நல்ல விமர்சகனாய் இரு
  • வீட்டுக்குள் நடப்பதை வீதிக்கு எடுத்துச்செல்லாதே, வீதியில் பாதித்தவற்றை வீட்டுக்குக் கொண்டுவா
  • மனிதனாய் இரு மகானாய் வேண்டாம்
  • மகானாய் இருக்கவேண்டாம் ஒரு தாய்க்கு நல்ல மகனாய் இரு
  • குழந்தையை ரசிக்கக் கற்றுக்கொள் குணவானாவாய்
  • இயற்கையை ரசி அது உன்னிடம் பேசும்